அம்மா நீ இருந்திருந்தால்

தாயின் பிரிவு ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை ஆழமான வெற்றிடத்தை உருவாக்குகிறது என்பதை மனதை உருக்கும் வரிகளில் வெளிப்படுத்தும் கவிதை. சிறுவயதிலேயே தாயை இழந்த மகனின் ஏக்கம், தனிமை, நிறைவேறாத அன்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடரும் நினைவுகளின் வலியை உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது. தாயின் அருமையையும், அவள் இல்லாத வாழ்க்கையின் சொல்லமுடியாத வெறுமையையும் பேசும் ஒரு நெகிழ்வூட்டும் படைப்பு.

Arul Pandiyarasan

4/9/2005

நீ இருந்திருந்தால் நான்

இன்னும் நல்லாயிருந்திருப்பேன்

தவழும் வயதில் என்னை

தனிமையில் நிறுத்திவிட்டாய்

கொஞ்சி பேசும் நாட்களை விதி

பறித்து கொண்டதே... ஏனம்மா?

உன் கண்களை மூடி என்

இதயத்தை இருட்டி விட்டாய்

பௌர்ணமி நிலவை காண முடியா

தேய்பிறை நான்

முன்பே சொல்லியிருந்தால் நானும்

கை கோர்த்திருப்பேன் உன்னோடு

என் நினைவு அறியாத வயதில்

அமிழ்ந்து போனாயே

உலகை விட உன்னை

அதிகம் நேசித்திருப்பேன்

எல்லாம் சொல்லி தரும் முன்னே

சொல்லாமல் சென்று விட்டாயே

தோழியாய் வந்திருந்தால்
வாழ்நாள் நட்பை பெற்றிருப்பேன்

தனிமையை தந்து என்னை

சிதறச் செய்தாயே

உன் அன்பை காட்டியிருந்தால்

வாழ்வை நிதானமாய் கற்றிருப்பேன்

நான் பெற்று கை விட்ட

அருஞ்செல்வமாகி போனாயே

உடல் தந்த தாயே

என் உயிர் கொண்டு சென்றாயே

உயிரை மட்டுமே நீ இழந்தாய்

உன் பிரிவால் என் உலகத்தையே இழந்தேனே

என்னை தவமிருந்து பெற்றாய் என்றார்கள்

ஆனால் நீயில்லா தனிமை தினமும் கொல்கிறது

என் நினைவில்லா நேரத்தில் நீ மறைந்து, மீளமுடியா
உன் நினைவுச் சிறைக்குள் என்னைத் தள்ளிவிட்டாய்

உதிர்ந்த பூவாய் நீ

வாடும் கொடியாய் நானோ

வழி காட்ட நீ இருந்திருந்தால்

வழி தப்பியிருக்க மாட்டேன்

என் பக்கத்தில் நீ இருந்திருந்தால்

பழிச்சொல் சுமந்திருக்கமாட்டேன்

சொல்லித் தர நீ இருந்தால்
வாழ்வில் தடுமாறியிருக்க மாட்டேன்

என்னை விட்டு சென்றதால் பிரிவின்

கடலாழம் அறிந்தேன்

உன் முகத்தையே மறந்த என்
குழந்தைப் பருவத்தை மன்னிக்க முடியவில்லை

உன் நினைவுகளால் மட்டுமே

என் உயிர் பிழைத்துக்கொண்டிருக்கிறது

நான் என்ன பெற்றாலும், எவ்வளவு உயர்ந்தாலும்

நீ இல்லாமல் நான் நாடில்லா அரசன்

அம்மா நீ இருந்திருந்தால்

நான் இன்னும் நல்லாயிருந்திருப்பேன்.

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.